என் பெயர் நவரத்தினம். நண்பர்கள் என்னை நவ்ஸ் என்று அழைப்பார்கள். நான் என் நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றேன். அது ஒரு அடை மழை காலம். நல்ல குளிர் காற்று. மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு. பல இடங்களை சுற்றிப்பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை முடிந்து இருள் லேசாக கவியத் தொடங்கியது.
இறுதியாக தற்கொலை பாறை பகுதிக்கு சென்றோம். அங்கே வேலி போடப்பட்டு இருந்ததினால், அங்கிருந்த சிலரின் எச்சரிக்கையையும் மீறி சிறிது தள்ளி வேலி இடாத பகுதிக்கு சென்றோம்.அவ்விடத்தில் மண் ஈரத்தின் காரணமாக உறுதியற்று இருந்தது. அதனால் மற்றவர்கள் வந்த வழியே திரும்பி செல்ல ஆரம்பித்தனர். ஆனால் நானும் இன்னொரு நண்பனும் முன்னே சென்று பள்ளத்தாக்கை பார்த்துவிட்டு திரும்பலாம் என்று நினைத்தோம். நான் இன்னும் சிறிது முன்னே விளிம்பின் அருகில் சென்றேன். நண்பன் என்னை பின் தொடர்ந்து வந்தான். திடீர் என்று என் காலுக்கு கீழுள்ள மண் சரிந்தது. நான் பள்ளத்தில் சரிய ஆரம்பித்தேன். என் பின்னால் வந்த நண்பன், என் கையை பிடித்து மேலே தூக்க முயற்சி செய்தான். என் கண் முன்னே உலகம் சுற்றியது. மண் சரிவு மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. அவனால் என்னை மேலே தூக்க முடியவில்லை. அவன் நின்ற இடமும் சிறிது சிறிதாக சரியாய் ஆரம்பித்தது. அதனால் அவன் தன் முயற்சியை கைவிட்டு மற்ற நண்பர்களை அழைக்க சென்றான்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் மண் சரிவு அதிகரித்தால் நான் வேகமாக சரிந்தேன். பிடிமானம் எதுவுமில்லை. சரிந்து கொண்டே மண்ணுக்குள் புதைந்தேன். கடைசியில் ஒரு இடத்தில் சரிவு முடிந்தது. என் தலைக்கு மேல் முழுவதும் மண். மூச்சு விட முடியவில்லை. கண்ணை திறந்து பார்த்தால் சுற்றிலும் இருள். கையை கொண்டு முகத்தின் மேலிருந்த மண்ணை அகற்ற முயன்றேன். நான் மண்ணின் ஆழத்தில் இருந்ததால் அகற்ற அகற்ற மண் வந்து கொண்டே இருந்தது. என் பயம் அதிகரித்தது. உடம்பு முழுவதும் வேர்க்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்ற உந்துதலில் என் மேலுள்ள மண்ணை முன்னிலும் வேகமாக அகற்றினேன். இருந்தும் பயனில்லை. கடைசியில் ஒரு வழியாக முகத்தை மூடியுள்ள மண் முழுவதையும் அகற்றிப் பார்த்தால் தலைக்கு மேலே மின்விசிறி சுற்றும் ஓசை கேட்கிறது. அடச்சீ கனவு!!! கனவும் நனவும் சந்தித்த புள்ளியில் அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை சுற்றிலும் கருப்பு நிற கம்பளி போர்வை. தூக்கத்தில் குளிருக்கு இதமாக முகம் முழுவதையும் மூடி இருந்த போர்வையை அகற்றத்தான் இத்தனை பாடுபட்டிருக்கிறேன். வெட்கி தலை குனிந்தேன். எப்படியோ மிகப் பெரிய ஆபத்தில்லிருந்து தப்பிய திருப்தியோடும் அதிர்ச்சியோடும் அடுத்த சுற்று தூக்கத்தை ஆரம்பித்தேன். புதிய கனவுக்கு ஆயத்தமானேன்.
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
Monday, November 22, 2010
Saturday, December 12, 2009
ரேணிகுண்டா படப்பிடிப்பை நேரில் பார்த்த அனுபவம்

14-06-2009 அன்று கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தேன்.திருமண மண்டபம் உப்பிலியப்பர் கோயிலுக்கு எதிரிலேயே இருந்தது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள், உப்பிலியப்பர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தால் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று நண்பர் கூறினார்.
திருமண நிகழ்ச்சி முடிந்ததும், சுவாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் கும்பகோணம் கிளம்ப மதியம் ஆகிவிட்டது. எனக்கு பெங்களூர் இரயில் மாலை ஆறு மணிக்கு தான் என்பதால், கும்பகோணம் சென்று ஏதாவது தமிழ் படத்திற்கு செல்லலாம் என்று நினைத்திருந்தேன். கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு அருகே திரைஅரங்குகள் இல்லாததால், ஆனந்த விகடனை வாங்கி கொண்டு இரயில்வே ஸ்டேசனுக்கு சென்று விட்டேன்.
பெங்களூர் இரயில் ஆறு மணிக்கு வரும் என்பதால், எப்படி பொழுதை போக்குவது என்று யோசித்து கொண்டிருந்தேன். அங்கு புத்தகத்தை படித்து முடித்துவிட்டு நான்கு மணிக்கு முதலாவது நடை மேடைக்கு சென்றேன். அங்கு ஒரு இரயில் நின்று கொண்டு இருந்தது. இரயிலில் சென்னை To மும்பை என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்படிருந்தது. கும்பகோணத்திலிருந்து மும்பைக்கு ட்ரெயின் இருக்கிறதா என்று ஆச்சர்யமடைந்தேன்.அந்த இரயிலின் அருகே பலர் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்த பொழுது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு சண்டை காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர். படப்பிடிப்பு நடக்கும் நடைமேடையில் காமெராவில் படுவது போல ஆங்காங்கே தெலுங்கு விளம்பர பலகைகளை வைத்திருந்தார்கள். நான் அருகிலிருந்தவரிடம் இந்த படத்தின் பேர் என்ன என்று கேட்டேன். அவர் ரேணிகுண்டா என்று கூறினார். பேரை கேட்டதும் நான் அது ஒரு தெலுங்கு படம் என்று நினைத்து கொண்டேன்.
ஓடும் இரயிலில் சண்டையிடும் ஒரு இளைஞர், வெளியே பறந்து வந்து விழுவது போல் காட்சி.
அந்த இளைஞரை பார்க்க பரிதாபமாக இருந்தது. வெயிலில் முகம் கருத்து, அழுக்கான உடை அணிந்து இருந்தார். அவருடைய இடுப்பில் கயிறு கட்டி இருந்தது. இரயில் பெட்டி வாசலின் முன்புறம், அவர் படுக்கை வசத்தில் கயிற்றின் உதவியால் கிடைமட்டமாக மிதந்து கொண்டிருந்தார். கைகளை தலையின் பின்னால் கொண்டு சென்று, பின் நீச்சல் அடிப்பது போல் கைகளை மேலும் கீழும் மெதுவாக அசைக்க வேண்டும் என்று அந்த இளைஞரிடம் இயக்குனர் கூறினார். இடுப்பில் மட்டுமே கயிறு கட்டி இருந்தாதால், இளைஞரால் தலையையும், காலையும் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அதனால் கிடைமட்டமாக இல்லாமல், சில சமயம் தலை அல்லது /----\ கால் பகுதி கீழ்ப்க்கம் சாய்ந்தது. அதனால் காட்சி சரியாக வரவில்லை. இயக்குனர் இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு காட்சியை OK செய்தார். அதுவரை அந்த இளைஞர் சிரமத்துடன் கிடைமட்டமாக தொங்கிகொண்டு இருந்தார். காட்சி சரியாக வரும் வரை இயக்குனர் அந்த இளைஞரை திட்டிக் கொண்டே இருந்தார்.
அப்பாடி காட்சி முடிந்தது, அந்த இளைஞரை இப்பொழுதாவது கயிற்றிலிருந்து கீழே இறக்குவார்கள் என்று நிம்மதி பெரு மூச்சுவிட்டேன். ஆனால் இயக்குனர் அடுத்த ஷாட்டுக்கு குழுவை தயார் செய்து கொண்டிருந்தார். அது என்ன ஷாட் என்றால், ஏற்கனவே பிரண்ட் வியூவில் எடுத்த காட்சியை டாப் ஆங்கிளில் படமாக்குவது. இதற்காக ஒரு கேமராவை கிரேனில் இணைத்திருந்தார்கள். அந்த கேமராவை ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்தார்கள். கேமராவில் எடுக்கப்படும் காட்சி இயக்குனரின் அருகில் இருந்த டிவியில் தெரிந்தது. கேமரா கிரேன் இளைஞரின் தலைக்கு மேலே வந்தது. இப்பொழுது டாப் ஆங்கிளில் படமாக்குவதால் இளைஞரின் முகம் தெரியும். அதனால் சரியாக எக்ஸ்பிரசன் கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு இந்த காட்சியும் OK ஆனது. அதுவரை அந்த இளைஞர் படும் கஷ்டம் பார்க்க கொடுமையாக இருந்தது. ஸ்டண்ட் கலைஞர்கள் இப்படிதான் கஷ்டப்படுவார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
இதற்கிடையே நேரம் ஆறு மணி ஆகிவிட்டதால் நான் பெங்களூர் இரயிலை பிடிக்க இரண்டாவது நடை மேடைக்கு சென்று விட்டேன். கடந்த வாரம், ரேணிகுண்டா பட விமர்சனத்தையும், புகைப்படங்களையும் வலைபூக்களில் பார்த்த பொழுது தான் அது தமிழ் படம் என்றும், சண்டை காட்சியில் நடித்த இளைஞர் தான் படத்தின் ஹீரோ என்றும் தெரிந்தது.
படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
Labels:
அனுபவம்,
படப்பிடிப்பு,
ரேணிகுண்டா
Subscribe to:
Posts (Atom)