Thursday, September 17, 2009

தாலசீமியா நோயால் அவதிப்பட்ட அக்காவை தன்னுடைய ஸ்டெம் செல் மூலம் காப்பாற்றிய தம்பி



இன்று தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி.

தாலசீமியா நோய்க்கு ஸ்டெம்செல் சிகிச்சை நாட்டிலேயே முதல் முறையாக சாதனை :

சென்னை:தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட, எட்டு வயது பெண் குழந்தைக்கு, ஸ்டெம் செல் மூலம், இந்தியாவிலேயே முதல் முறையாக, வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற கோவையைச் சேர்ந்த பெண் குழந்தை, முழு ஆரோக்கியம் பெற்றுள்ளது.

மிகக் கொடூரமான பரம்பரை நோய்களில் ஒன்று தாலசீமியா. ரத்தக் குறைபாடு நோயான இது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை வழக்கத்திற்கு மாறான வடிவத்திற்கு மாற்றும் தன்மை கொண்டது.இக்குறைப்பாட்டால், ரத்த சிவப்பணுக்கள் அதிகளவில் பாழ்பட்டு, தீவிர ரத்த சோகை ஏற்படும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை, ஒவ்வொரு மாதமும் முழுமையாக மாற்ற வேண்டும். இந்நோயை சரியான முறையில் கவனிக்காமல் விட்டால், பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்.


இந்நோய்க்கு ஒரே தீர்வாக, ஸ்டெம் செல் சிகிச்சை கருதப்படுகிறது. அதுவும், கனகச்சிதமாக பொருந்த 25 சதவீதம் மட்டுமே வாய்ப்பு.கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - சரோஜினி தம்பதியின் எட்டு வயது மகள் தாமிரபரணி, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, பெற்றோர் இவளை அழைத்து வந்தனர். இதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை தான் தீர்வு எனக் கருதிய டாக்டர் ரேவதி ராஜ், ஸ்டெம் செல்லுக்காக, செந்தில்குமார் தம்பதியை, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர்.


மருந்து போல், இன்னொரு குழந்தைக்கு கருத்தரித்தார் சரோஜினி. ஸ்கேன் செய்து பார்த்தபோது, அந்த கருவுக்கும் தாலசீமியா இருப்பது கண்டறியப்பட்டது. டாக்டர்களின் அறிவுரையின்படி, கரு கலைக்கப்பட்டது.


விடாமுயற்சியோடு, மீண்டும் 2008ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றனர். அதிர்ஷ்டவசமாக, அந்தக் குழந்தைக்கு தாலசீமியா பாதிப்பு இருக்கவில்லை. அக்குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் சேகரிக்கப்பட்டு, ஸ்டெம்செல்கள், சென்னையில் உள்ள லைப்செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டன.


இரண்டு குழந்தைகளின் திசுக்களும் பொருந்துகிறதா, மேற்கொண்டு தாமிரபரணிக்கு சிகிச்சை மேற்கொள்ளலாமா என்பதை உறுதிப்படுத்த, ஹெச்.எல்.ஏ., சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் முதல் படியாக, தாமிரபரணியின் உடலிலுள்ள அனைத்து எலும்பு மஜ்ஜை செல்களும், கீமோதெரபி மூலம் அழிக்கப்பட்டன. பின்னர், தம்பியின் ஸ்டெம் செல்கள் தாமிரபரணியின் உடம்பில் செலுத்தப்பட்டன.


சிகிச்சை முழு பலனளிக்கவே, தாமிரபரணி, தற்போது தாலசீமியா நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார். இனி, அந்தக் குழந்தையும், மற்ற பிஞ்சுகளைப் போலவே துள்ளி விளையாடலாம்.


இது குறித்து, லைப்செல் இன்ட்நேஷனல் நிர்வாக இயக்குனர் மயூர் அபாயா கூறுகையில், ""ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 ஆயிரம் குழந்தைகள் தாலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றன. உலகளவில் இது 10 சதவீதம். ஸ்டெம்செல் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிகர மாற்றத்திற்கு, நன்றி சொல்லும் தருணம் இது. தாலசீமியா மற்றும் லூகேமியா போன்ற பல்வேறு உயிர்கொல்லி நோய்களை, தற்போது அறுவை சிகிச்சையின்றி முழுவதுமாக குணப்படுத்தலாம்,'' என்றார்.தாமிரபரணியின் அப்பா செந்தில்குமார் கூறியதாவது:


என் மகள் தாமிரபரணிக்கு ஒன்றரை வயதிலிருந்தே உடல் நிலை பாதிக்கப்பட்டது. தலை முடி கொட்டிவிட்டது; விளையாட முடியாது; நடக்க முடியாது. கடந்த ஆறரை ஆண்டுகளாக, அவளுக்கு மாதம்தோறும் ரத்தம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, அப்பல்லோ மருத்துவனையில், என் மகள் தாமிரபரணிக்கு ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்டது. தற்போது என் மகள் தாலசீமியா நோயிலிருந்து குணமடைந்துவிட்டாள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5ஆக உள்ளது. என் மகளை அடுத்த ஆண்டு பள்ளியில் சேர்க்க உள்ளேன்.இந்த ஸ்டெம்செல் மாற்று சிகிச்சைக்கு, எட்டு லட்ச ரூபாய் செலவாகும் என்று டாக்டர்கள் சொன்னதும் மற்றவர்களின் உதவியை நாடினேன். தினமலர் நாளிதழில் இலவச விளம்பரமும் செய்யப்பட்டது. இதன் வழியாக பலர் மூலம் நிதி உதவி கிடைத்தது. பல்வேறு நிலைகளில் எனக்கு உதவிய மற்றும் வழிகாட்டிய அனைவருக்கும் என் நண்பர்களுக்கும் இந்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு செந்தில்குமார் உருக்கமாக கூறினார்.

Dinamalar URL : http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17064

2 comments:

vasu balaji said...

பயனுள்ள பகிர்வு. நன்றி

தங்கராசு நாகேந்திரன் said...

பயனுள்ள பதிவு பாராட்டுக்கள்